RSS

குரு – சிஷ்யன் – கடவுள்

துறவி ஒருவர் ஆற்றில் மூழ்கி தவம் செய்து கொண்டிருந்தார். ஒரு இளைஞன் குறுக்கிட்டு “ ஐயா நான் தங்களின் சிஷ்யனாக சேர விரும்புகிறேன்” என்றான்.ஆற்றிலிருந்து எழுந்தவர், ”ஏன்?” என்றார் துறவி. ”நான் கடவுளை அறிய விரும்புகிறேன்” என்றான்.

சட்டென்று துறவி அவன் கழுத்தின் பின்புறத்தைப் பிடித்து இழுத்து, அவன் தலையை ஆற்றினுள் முக்கினார். சிறிது நேரத்தில் மூச்சிறைத்த இளைஞன், திமுறிக் கொண்டு வெளியே வரத் துடித்தான். கடைசியாக துறவி அவனைப் பிடித்து வெளியே இழுத்தார். வெளியில் வந்த இளைஞன் இருமிக் கொண்டு பெரு மூச்செறிந்தான். துறவி கேட்டார், “நீ நீரினுள் மூழ்கி இருக்கும் போது உனக்கு என்ன தேவைப் பட்டது?” என்றார்.

”காற்று” என்றான் இளைஞன்.

”நல்லது, வீட்டுக்குச் செல். காற்று போல கடவுள் உனக்கு எப்போது தேவையோ அப்போது திரும்பி வா” என்று சொல்லி விட்டார்.

நீதி :முதலில் தகுதியாக்கிக் கொள். பின்னர் ஆசைப்படு (First Deserve & then Desire)

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

கோப்பையை காலி செய்!

கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் புகழ் பெற்ற ஜென் துறவி ஒருவரை சந்திக்கச் சென்றார். பேராசிரியர் ஜென் தத்துவங்களைப் பேசிக் கொண்டிருந்தார், தான் ஜென் பற்றி மேலும் கற்க விரும்புவதாக்க் கூறினார்.

தேனீர்க் கோப்பையை எடுத்துக் கொண்டு வந்த ஜென் துறவி, கோப்பையின் நுனி வரை தேனீரை ஊற்றினார். கோப்பை நிரம்பி வழிந்தது.

கோபத்துடன் பேராசிரியர் “ கோப்பை நிரம்பி விட்டது. மேலும் ஊற்ற முடியாது. நிறுத்துங்கள்” என்று கத்தினார். துறவி கூறினார்: “நீங்களும் இந்த கோப்பை போலத்தான்.

உங்கள் கோப்பையைக் காலி செய்யாவிடின், நான் எவ்வாறு ஜென் பற்றி கற்றுக் கொடுப்பது?”

நீதி :கற்றுக் கொள்ளக் கற்காமலிரு (Unlearn to learn)

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

இரு குரு

போர்க்கலைகள் கற்க விரும்பும் மாணவன் ஒருவன் குருவிடம் சென்றான். ”நான் போர்க்கலைகள் கற்க விரும்புகிறேன். தங்களிடம் கற்பதோடு இன்னொரு ஆசிரியரிடமும் சேர்ந்து பயிற்சி பெற்று பல்வேறு திறன்களையும் வளர்க்கலாம் என்று நினைக்கிறேன். இது பற்றி தங்கள் கருத்து?”

குரு சொன்னார்: “இரண்டு முயல்களைத் துரத்தும் வேட்டைக்காரன் ஒன்றையும் பிடிக்கமாட்டான்.”

கதைகள், குரு, ஜென், , ஜென் துறவி, , தமிழ் சிறுகதைகள், தமிழ் வளம், தமிழ்வளம், துறவி

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

முல்லா கதைகள்

நானும் காணாமல் போயிருப்பேன்:


முல்லா ஒரு கழுதையை மிகச் செல்லமாக வளர்த்து வந்தார். அது ஒரு நாள்
வெளியே மேயும் போது காணாமல் போய்விட்டது. கழுதை காணாமல் போன தகவலை
பதறியடித்துக்கொண்டு முல்லாவிடம் சொல்லிய ஊர்க்காரர்களிடம் முல்லா,
‘‘அப்பாடா... ரொம்ப நல்லதாய்ப் போனது’’ என்றார். ‘‘உங்கள் கழுதை காணாமல்
போய் விட்டதென்கிறோம்.. எப்படி அதை நல்லதென்கிறீர்கள்?’’ என்று கேட்டனர்.
முல்லா, ‘‘நான் அதன்மேல் சவாரி போயிருந்தால் நானும் அதனுடன் காணாமல்
போயிருப்பேன்... நல்லவேளை’’ என்றாராம். 



____________________________________________________________________________


என் வார்த்தையை விட கழுதையின் வார்த்தைதான் உனக்கு முக்கியம்:


ஒரு நாள் முல்லாவின் பக்கத்து வீட்டுக்காரர், முல்லாவை அழைத்து, ‘‘உங்கள்
கழுதையை இரவல் தர முடியுமா?’’ என்று கேட்டார்.முல்லா, ‘‘முடியாததற்கு
வருந்துகிறேன். ஏற்கெனவே கழுதையை வாடகைக்கு விட்டு விட்டேன்’’
என்றார்.முல்லா பக்கத்து வீட்டுக்காரரிடம் இதைச் சொல்லிக் கொண்டிருக்கும்
போது முல்லாவின் பின் தொழுவத்திலிருந்து கழுதையின் கனைப்பு கேட்கத்
தொடங்கியது. பக்கத்து வீட்டுக்காரர் முல்லாவிடம், ‘‘கழுதை அங்கிருந்து
சத்தமிடுகிறதே முல்லா’’ என்றார். உடனே கோபத்துடன், ‘‘என் வார்த்தையை விட
கழுதையின் வார்த்தைதான் உனக்கு முக்கியம்... உனக்கு வெட்கமாய் இல்லை’’
என்றார் முல்லா. 

_______________________________________________________________________________
இரவல் தருவதை விட அதுவொன்றும் சிரமமான காரியம் 
இல்லை:


முல்லாவின் தெருவில் குடியிருக்கும் ஒருவர் முல்லா வீட்டுக்கு வந்தார்.
‘‘முல்லா, உங்கள் வீட்டுக் கொடியை எனக்கு இரவல் தரமுடியுமா?’’ என்று கேட்டார். 

முல்லா, ‘‘முடியாது’’ என்றார்.தெருக்காரர், ‘‘ஏன் முடியாதென்கிறீர்கள் முல்லா?’’ என்றார். 
முல்லா, ‘‘கொடியில் மாவு உலரப் போட்டிருக்கிறேன். தரமுடியாது’’ என்றார் முல்லா. 
தெருக்காரர், ‘‘கொடியில் மாவை உலரப் போட முடியுமா?’’ என்றார். 
முல்லா, ‘‘இரவல் தருவதை விட அதுவொன்றும் சிரமமான காரியம் இல்லை’’ என்றார். 

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

கூடா நட்பு

சங்கமித்திரன் என்ற அரசன் ஒரு நாட்டை ஆண்டு வந்தான். அவனுக்கு குரங்குகள்
என்றால் மிகவும் பிரியம். ஆகையால் தன் அறைக்குள்ளேயே ஒரு குரங்கை வளர்த்து
வந்தான். தன் படுக்கையறைக்குள் வருமளவுக்குச் சுதந்திரம் அளித்து
வைத்திருந்தான் சங்கமித்திரன்.

ஒரு நாள் அரசவையில் அதன் அட்டகாசம் தாங்காது அமைச்சர்களும் மற்றவர்களும்
குரங்கின் நட்பை விட்டுவிடுமாறு கூறினார்கள். அவர்களது அறிவுரையை ஏற்கவும்
மறுத்தான் சங்கமித்திரன்.

ஒரு நாள் இரவில் தான் தூங்கப் போகும் போது குரங்கை தனக்கு விசிறி விடுமாறு
சொல்லிவிட்டு ஆழ்ந்து தூங்கிப் போனான் அரசன். அப்போது ஒரு ஈ ஒன்று அவன்
கழுத்தில் வந்து அமர்ந்தது. விசிறியால் மீண்டும் மீண்டும் விசிறியும் ஈ
பறக்காமல் அமர்ந்திருந்தது. இதனால் கோபம் கொண்ட குரங்கு, "உன்னைக் கொன்று
விடுகிறேன் பார்" என்று சொல்லி அரசனின் வாளால் அரசனின் கழுத்தில் அமர்ந்திருந்த
ஈயை வெட்ட வாளை ஓங்கி வீசியது. அரசனின் கழுத்து துண்டானது.

கூடா நட்பு கேடாய் முடியும்.

குறள் 792:
ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை
தான்சாம் துயரம் தரும்.

மீண்டும் மீண்டும் ஆராயாமல் கொள்கிற நட்பு, கடைசியில் ஒருவர் சாவுக்குக்
காரணமாகிற அளவுக்குத் துயரத்தை உண்டாக்கி விடும்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

அடி !

ப்ளஸ் டூ பரீட்சைக்குப் படித்துக்கொண்டிருந்த அண்ணனை அடித்தாள் சுவேதா. ''போடீ இங்கிருந்து'' என டென்ஷனானான். அங்கிருந்து ஓடி, பேப்பர் படித்துக்கொண்டிருந்த அப்பாவை நெருங்கி ஓர் அடி வைத்தாள். நிமிர்ந்து பார்த்தவர், ''ஓகே!'' என்றார்.

அவருக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருந்த பாட்டியின் கன்னத்தில் அடித்தாள். ''ஒழுங்கா அடிம்மா!'' என்றாள் பாட்டி. அங்கே வந்து அமர்ந்த தாத்தாவையும் விடவில்லை... முதுகில் ஓர் அடி கொடுத்தாள். ''அடிச்சியா... நகரு!'' என்று திரும்பிப் பார்த்தார் தாத்தா.

அப்போது, கிச்சனில் இருந்து வெளியே வந்தாள் அம்மா. ''கைலே சூடா டீ இருக்கு... கிட்டே வந்துடாதே!'' என்று அவள் கத்தியதையும் பொருட்படுத்தாமல் அம்மாவை நெருங்கி, அவள் காலில் ஓர் அடி போட்டாள் சுவேதா. சமாளித்து நின்ற அம்மா, ''எத்தனை அடி அடிப்பே? அங்கே பாரு அப்பாகிட்டே'' என்று கை நீட்டினாள். அப்பா தன்னைத் தானே ஒரு அடி போட்டுக் கொண்டு, ''அடிச்சுட்டேன் சுவேதா... ஒரு பக்கம் அமைதியா உட்காரு'' என்ற அப்பா நொந்து கொண்டார், ''நல்லா அடிக்கிறே கொசுவை!'

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

கனகு!

பள்ளிக்கூடத்தில் மணி அடிக்கிற வேலை கனகசாமிக்கு. எது நடக்கிறதோ இல்லையோ... அந்தந்த
வேளைக்கு டான் என்று மணி அடித்துவிடுவார் கனகு. அன்றும் வழக்கம்போல வீட்டில்
இருந்து கிளம்பிய கனகுக்கு, பெரிய கவலை ஒன்று வாட்டி எடுத்தது. 'ச்சே! இன்னிக்கு
மணி அடிக்க முடியாதே... இப்படி ஆயிடுச்சே..!’ என்று புலம்பித் தள்ளினார். 'நேத்து
எல்லாம் நல்லா அடிக்க முடிஞ்சதே. காலைல இப்படி ஆயிடுச்சே... ஹூம்! இன்னிக்கு
ஃபுல்லா மணி அடிக்காமலே ஓட்டியாகணும்...’ என்று பள்ளிக்கூடத்தை நெருங்கிய கனகு,
'சரி, ஸ்கூல் டயம் ஆயிடுச்சு... ஃபர்ஸ்ட் பெல்லை அடிச்சுட்டு வந்து, நம்ம சைக்கிள்
பெல்லுல என்ன ரிப்பேர்னு கவனிப்போம்’ என்று ஓடினார்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

வெள்ளம் !

திடீரென்று வீட்டுக்குள் வெள்ளம் புகுந்தது. வீட்டில் இருந்த பொருட்கள் எல்லாம்
தண்ணீரில் மிதக்க, எல்லோரும் இங்கும் அங்குமாக ஓடினார்கள். குட்டீஸ் எல்லாம்
தண்ணீரில் தத்தளிக்க, அவர்களை ஒரு பக்கமாக இழுத்து உட்கார வைத்தவள், ''இதுக்குதான்
சொன்னேன், ஏரி ஓரமா வீட்டைக் கட்டாதீங்கன்னு... இப்பப் பாருங்க எல்லாம் நாசம்!''
என்று கத்த, ''சரி, என்ன செய்றது... ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு விதமான பிரச்னைகள்
இருக்கத்தான் செய்யுது. கவலைய விடு. எல்லாரையும் கூட்டிக்க, வேற இடத்துக்குப்
போயிடுவோம்'' என்று பெருசு சொல்ல, குடும்பம் குடும்பமாக வேறு இடத்தில் புற்று
வைக்கக் கிளம்பியது அந்த எறும்புக் கூட்டம்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

சுஜாதா - நீதிக் கதைகள் - கழுகு

ஒரு கழுகு சுதந்திரமாகப் பறந்து சென்றுகொண்டிருந்தது. விஷ் என்ற சப்தம் கேட்டு அது என்ன என்று பார்ப்பதற்குள் ஒரு அம்பு அதைத் தாக்க, அடிபட்டு தன் இறக்கை இழந்து சுழன்று சுழன்று சொத்தென்று கீழே விழுவதற்கு முன் தன்னைத் தைத்த அம்பை ஒரு தடவை பார்த்தது. கூர்மையான முனை, நீண்ட உடல், அதன் வாலில் கழுகிறகு! ‘அடப்பாவமே!’ என்று சொல்லிகொண்டே செத்துப்போனது.

நீதி : பல தடவை நம் எதிரிகளுக்கு நம்மை அழிக்க நாமே உதவி செய்து தருகிறோம்.


-புதிய நீதிக் கதைகள் புத்தகத்தில் சுஜாதா

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

நண்டு போதனை

நண்டு போதனை

அம்மா நண்டு தன் மகனைப் பார்த்து “மகனே ! ஏன் சைடு வாங்கிக்கொண்டு நடக்கிறாய்! ஏன் நேராக நடவேன்” என்றது. மகன் “உண்மைதான் அம்மா, நேராக எப்படி நடப்பது என்று சொல்லிக்கொடுத்தால் நிச்சயம் நான் அவ்வாறே நடந்து காட்டுகிறேன்” என்றது. தாய் நண்டு என்ன தான் முயற்சிச்சாதலும் நேராக நடக்க வரவில்லை. பக்கவாட்டிலேதான் செல்ல முடிந்தது. “சரி, இப்படியே நடந்து தொலை” என்றது.

நீதி : உபதேசத்தைவிட உதாரணம் சக்தி வாய்ந்தது.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

யோசிக்காத விவசாயி

விவசாயத்திற்க்கு நரி மேல் கோபம். அவன் கோழிகளை அடிக்கடி பிடித்து எலும்பைக்கூட விட்டு வைக்காமல் தின்றுவிடுகிறது என்று கோபம். இதற்கு முடிவு கட்டியே ஆக வேண்டும் என்று ஒருமுறை அதற்காக இரவில் பதுங்கிக் காத்திருந்தான். நரி வந்தபோது அதன்மேல் சாக்கு போர்த்தி லபக்கென்று பிடித்துவிட்டான். பிடித்து என்ன தண்டனை கொடுக்கலாம் என்று யோசித்தான். அதன் வாலில் மண்ணெண்ணையில் நனைத்த துணியைச் சுற்றிப் பற்ற வைத்துவிட்டான்.

“என் கோழிகளைத் தினறாய் அல்லவா? ஒழிந்து போ!” என்று அதைத் துரத்திவிட்டான்.

நரி தன்னையறியாமல் விவசாயிகளின் வயலுக்குள்ளேயே நுழைந்தது. பயிர் முதிர்ந்து ஒரு பக்கம் நெற்குவியல், மறு பக்கம் வைக்கோல் போட்டு முதிர்ந்த கதிர்கலைக் களையறுக்க காத்திருந்த நேரம் அது. நரியின் வரவால் ஏக்கர் முழுக்க தீ பரவி தானியமெல்லாம் கருகிச் சாம்பலானது.

விவசாயிக்கு நரியைப் பழிவாங்கியதில் நஷ்டம்தான் பன்மடங்கு.

நீதி : பிறரைப் பழிவாங்கும்போது முதலில் தனக்குத் துன்பம் வராமல் கவனித்துக்கொள்ள வேண்டும்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

நீதிக் கதைகள்

ஒருவன் தன் கழுதை மேல் சுமை ஏற்றிக் கொண்டிருக்கும் போது எதிரிகள் வருவதைப் பார்த்தான், பயந்துபோய், “கழுதையே வா! நாமிருவரும் ஒடிப்போய்விடலாம். எதிரிகள் வருகிறார்” என்றான்.

கழுதை, “நான் வரவில்லை. நீ ஓடு!” என்றது.

”ஏன் கழுதாய்?”

”எதிரிகளுக்கும் பொதி சுமக்கத்தானே போகிறேன். உன்னுடன் வந்தால் எனக்கு சுமை குறையப்போகிறாதா?” என்றது.


நீதி: அரசு மாறும்போது, ஏழை மக்களுக்கு நிகழும் ஒரே மாற்றம் எஜமானர்களின் பெயர் மட்டுமே!

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

உயிர் காக்கும் தந்திரம்

நரி பூனையிடம் தற்பெருமை பேசிக்கொண்டது. “எனக்கு பகைவர்களிடமிருந்து தப்பிக்க நூறு தந்திரங்கள் தெரியும். உனக்கு?”

“எனக்கு ஒரே ஒரு தந்திரம் தான் தெரியும்.” என்றது பூனை.

அப்போது பெரிசாக சப்தம் கேட்டது. ஒநாய்களும், வேடர்களும் துரத்தி வரும் இரைச்சல் கேட்டது. பூனை லபக்கென்று மரத்தில் பாய்ந்து உச்சாணியில் ஏறிக்கொண்டது.

நரிக்கு தன் நூறு தந்திரங்களில் எந்தத் தந்திரத்தைப் பயன் படுத்துவது என்ற யோசனையில் காலதாமதமாகி மாட்டிக்கொண்டு உயிர் துறந்தது.

நீதி : சந்தேகத்துக்குரிய நூறு வழிகளைவிட பத்திரமான ஒரு வழியே மேல்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

ஆன்மிகக் கதைகள்

எதனை நீ அதிகம் நினைக்கின்றாயோ, முடிவில் நீ அதுவே ஆகிவிடுகின்றாய்.

ஆசிரியர் ஒருவர் வகுப்பில் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். மாணவர்கள்
ஆர்வத்தோடு உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருந்தனர். ஆனால் ஒரு மாணவன் மட்டும் பாடத்தைக் கவனிக்காது ஏதோ சிந்தனையில் இருந்தான். ஆசிரியர் அவனைக் கண்டார். அவன் ஏதோ கற்பனை உலகத்தில் இருக்கிறான் என்பதைப் புரிந்து கொண்டார். எனவே அவனை தன்னருகில் வரச் சொன்னார்.

" பாடத்தைக் கவனிக்காமல் அப்படி என்ன சிந்தனையில் ஆழ்ந்திருந்தாய்" எனக்
கேட்டார். அதற்கு அம் மாணவன் தனது வீட்டில் அழகிய காளை ஒன்று
இருப்பதாகவும், அதன் நினைவே தனக்கு எப்போதும் இருப்பதாகவும் கூறினான். ஆசிரியர் அதற்கு அவனிடம்"அதோ எதிரில் தெரியும் குன்றில் அமர்ந்து உன் அழகிய காளையைப் பற்றி எண்ணியபடி இரு" என்று கூறினார்.

அம் மாணவனும் தொடர்ந்து ஏழு நாட்கள் அக்குன்றின் மேல் அமர்ந்து காளையை எண்ணியபடி இருந்தான். சாதாரணமாக இல்லை ஆழ்ந்து அதைப் பற்றியே எண்ணியபடி இருந்தான். அதன் பின் இப்படி இருப்பது அவனுக்கே வேண்டாம் என்று போய்விட மறுபடியும் பள்ளிக்குச் சென்றான்.

பள்ளிக்கு வந்தவன், வகுப்பறையின் வெளியிலேயே நின்று கொண்டிருந்தான்.
ஆசிரியர் அவனிடம் "உன் காளையைப் பற்றிய தியானம் முடிவடைந்து விட்டால் வகுப்பு அறைக்குள் வரலாமே" என்றார். அதற்கு அம் மாணவன் "இனிமேல் நான் குன்றுக்கு போகமாட்டேன், காளையையும் நினைக்கமாட்டேன், ஆனாலும் வகுப்பறைக்குள் என்னால் வரமுடியாது"என்றான். இப்பதிலால் ஆச்சரியம் அடைந்த ஆசிரியர் "ஏன்" எனக் கேட்டார். அதற்கு அவன் " எனது தலையின் இருமருங்கிலும் வளர்ந்துள்ள கொம்புகள் என்னை வகுப்பறைக்குள் நுழையவிடாமல் தடுக்கின்றது " என்றான். இடைவிடாது காளையைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்த மாணவனுடைய மனம் அவனையும் காளையாகவே சிந்திக்கத் தூண்டியது.

ஆக, ஒருமுகப்படுத்தப்பட்ட மனதால் முடியாதது எதுவுமேயில்லை. தெய்வத்தின் மீதும், நல்ல எண்ணங்களின் மீதும் மனதை  ஒருமுகப்படுத்துவோமேயானால் நாம் பேரின்பத்தைப் பெறுவோம் என்பது உண்மை. மாறாக தீய எண்ணங்களில் மனதை செலுத்தினால் அழிவு நிச்சயம். எனவே இன்றிலிருந்தே மனதை நல்ல எண்ணங்களின் மீதும் தெய்வத்தின் மீதும் செலுத்தி, நன்மைகளை அடைவோம்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

உங்கள் கருத்துகள்

Guestbook

படித்தவர்கள்